சிவபெருமான்
தொழில்களுள் ஒன்று அழித்தல் ஆகும். இறைவன் தோற்றுவித்த உயிர்களை மீண்டும்
ஒடுங்குவதே அழித்தல் ஆகும். மேலும், உலகத்தைக்
காக்கவும், தீமைகளை ஒழிக்கவும் இத்தொழில்
மேற்கொள்ளப்படுகிறது. சிவன் நெருப்பேந்திய கையானது அழித்தல் தொழிலையே குறிக்கிறது.
இத்தொழில் யாவும் தீய சக்தி கொண்ட
அரக்கர்களை அழித்தலும், தேவர்கள் மற்றைய கடவுளருக்குள்ள தீய
குணங்களை அகற்றும் பொருட்டும், மக்களுக்கு
நற்கருத்துகள் வழங்குவற்காகவும் நடத்தப்படுகிறது.
திரிபுரம் எரித்த புராணம்
இறைவன் தீமை
செய்யும் அசுரர்களிடமிருந்து இவ்வுலகத்தைக் காக்கும் பொருட்டு அவர்களை வதம்
செய்கிறார். தாராகசுரன் புதல்வர்கள் வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் மூவர். இவர்கள்
பிரம்மனிடம் பொன்னி, வெள்ளி, இரும்பாலான மூன்று பறக்கும் நகரங்களைப் பெற்றனர். மேலும், மூன்று நகரங்களையும் ஒரே பாணத்தால் அழிக்க வல்லவனால் மட்டுமே
தங்களுக்கு மரணம் நேர வேண்டுமென்ற வரத்தையும் பெற்றனர். அசுரர்கள் திரிபுரம்
வழியாகத் தாம் நினைத்த இடங்களுக்குச் சென்று தேவர்களையும் முனிவர்களையும்
துன்பப்படுத்தினர். தேவர்கள் சிவனை வேண்டி நின்றனர்.
சிவன் பூமியைத்
தேராகவும், திங்களும் ஞாயிறும் தேர்
சக்கரங்களாகவும், நான்மறையைக் குதிரைகளாகவும், நான்முகனைத் தேரோட்டியாகவும், மேருமலையை வில்லாகவும், ஆதிசேடனை
நாணாகவும், அக்கினியை முனையாக உடைய அம்பாகவும்,
பிற அமரர்களைப் போர் கருவிகளாகவும் அமைத்துக்
கொண்டு போர் செய்யப் புறப்பட்டார்.
இறைவன் மேருவாகிய வில்லை வளைத்துப் போர் செய்ததார். சிவன் திரிபுரத்தை அழிக்க
தேவர்கள் செய்த தேரின் மீது ஏறிச் சென்றார். இறைவன் ஏறியவுடனே தேரின் அச்சு
முறிந்தது. அதனால், இடப வடிவுடன் திருமால் சிவனைத்
தாங்கினார்.
தங்கள் உதவியுடனே இறைவர் போரிட ஆயுதமானார்
என்று அமரர்கள் தத்தம் வல்லமையை நினைத்துச் செருக்குக்
கொண்டனர். அதனை உணர்ந்த சிவன், அவர்களது உதவியை ஏற்காமல் தானே
புன்சிரிப்புச் செய்து அரக்கர் அனைவரையும் முப்புரங்களோடு எரித்தார்.
"ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின்
வீழ்வித்
தாங்கன்"
என்று சிவன் சிரித்த சிரிப்பினாலேயே திரிபுரம் எரிந்து வீழ்ந்தது என மாணிக்கவாசகர்
குறிப்பிடுகிறார்.
அச்சமயத்தில் திரிபுரத்தவர்கள்
தலையும் அற்றுப் போனது
.இருப்பினும், அம்மூவர்கள் சிவலிங்கத்தை வழிபட்டு
வந்ததால் சிவகண பதவியை சிவன் அளித்தாரெனவும்,
சிவன் திரிபுரம்
எரித்த பின் தாமும் அவ்வெற்றிக்குரியவராகக் கருதி இறுமாப்புடையவராய் தேவர்கள்
இருந்தனர். அஃதுணர்ந்த சிவன் இயக்க வடிவங்கொண்டு எதிரில் நின்றகாலை அவர்கள் இறைவனை
அறியாதிருந்தனர்.
"வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்"
என்று தேவர்கள் தேடும்படி சிவன் மகேந்திர மலையில் இருந்ததாக மணிக்கவாசகர் பாடுகிறார்.
"முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம்
எய்தமை யார்அறி வாரே"
என்று திரிபுரம் எரித்தது என்பது ‘ஆணவம்’, ‘கன்மம்’, ‘மாயை’ என்னும் மன அழுக்குகளை
அழிக்கப்படுவதாகக் கொள்ளுதல் வேண்டுமென திருமூலர் கூறுகிறார்.
இப்புராணத்தில்
அசுரர்கள் அழிக்கப்பட்டாலும் சிவபுண்ணியத்தால் அருள் பெறுகின்றனர். தேவர்கள்
அகந்தை நீங்க தண்டனை வழங்கப்படுகிறது. எனவே, இறைவன் அவரவர்க்கு ஏற்றவாறே தண்டனையும், அருளும் வழங்குகிறார் என்று அறியமுடிகிறது.
சலந்தரனைத் தடிந்தப் புராணம்
சிவபெருமான்
சலந்தரனை அழித்து தேவர்களையும் ஏனைய
கடவுளரையும் காத்தார்.
சலந்தரன்
என்பவன் அநேக வரத்தால் தேவர்களையும், பிரம்மன்,
திருமாலையும் வெற்றிக் கொண்டான். உமையம்மை மீது
காமங்கொண்டு சிவனை எதிர்க்கவும் செய்தான். அவனை அழிக்கும் பொருட்டு சிவன் தமது
கால் கட்டை விரலினால் பூமியில் ஒரு சக்கரத்தை வரைந்தார். அதை அவனை எடுக்கும்படி
கூறினார். சலந்தரனால் அதை எடுக்க முடியவில்லை. சிவன் அந்தச் சக்கரத்தைப்
பெயர்த்தெடுத்து அவன் மீது வீசினார். அது சக்கராயுதமாக மாறி அவனை வதைத்தது.
"செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலால்
ஒழிந்திடு
சலந்தரன் உச்சி யேமுதல்
கிழிந்தது----------"
என்று சக்கரம் சலந்தரனின் உடல் முழுவதும் கிழிந்ததாகக் "கந்தபுராணம்"
கூறுகிறது. இப்புராணம் வழி, அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டவர்க்கு
அழிவு நேரிடுமென்பது அறியப்பட்டது.
அந்தகாசுரனை அழித்த புராணம்
தேவர்களின்
பயத்தைப் போக்குவதற்கு இறைவன் அந்தகாசுரனை அழித்தார். அந்தகாசுரன் என்னும் அசுரன்
தேவர் முதலானவரைத் துன்புறுத்தி வந்தான். சிவனிடம் அநேக வரம் பெற்றதால் அவனை
யாராலும் அழிக்க முடியவில்லை. தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண் வடிவங்கொண்டு
கயிலையில் இறைவி கணங்களோடு இருந்தனர். இதை அறிந்து அசுரன் கயிலையில்
போர்தொடுத்தான். சிவன் வயிரவமூர்த்தியை அனுப்பினார். அவர் சென்று அவனைச் சூலத்தில்
கோத்து நடனம் செய்தார். தன் தவறை உணர்ந்து அவரை வணங்கினான். சிவன் அவன் மீது கருணைக் காட்டி சிவகண பதவியை அளித்தார்.
இத்தொன்மத்தில் அந்தகாசுரனை அழித்தருளியதில் மனிதனிடம் குடிக்கொண்டு
இருக்கும் அசுரத்தன்மையை அழித்தல் இன்றியமையாதது என்பது உணர்த்தும்.
தக்கனை அழித்த புராணம்
தக்கன்
சிவனுக்கு மாமன். தக்கன் செருக்குற்றுச் சிவனை ஒழித்து மற்றைத் தேவர்களை வைத்துக்
கொண்டு ஒரு பெரிய வேள்வியைச் செய்தான். தந்தை செய்த வேள்வியைக் காண அழைப்பின்றி
உமை வந்தாள். அவளை இகழ்ந்தான் தக்கன்.
இதனால், சிவன் கோபங்கொண்டு வேள்வியை அழிக்கும்படி வீரபத்திரனை ஏவினார்.
சிவனின் ஆணையேற்று வீரபத்திரன் தக்கன் யாகத்தை அழித்தான். சினமுற்ற தக்கன் அவனைத்
தாக்கினான். வீரபத்திரன் உக்கிரத்துடன் அவன் தலையை வெட்டினான். மேலும் ,எச்சன் யாகத்தின் அதிதேவதை. அவனது தலையும் வீழ்த்தப்பட்டது. வேள்வியின் குரு
வியாத்திரன். வேள்விக்கு உதவியதால் அவனது தலை அறுக்கப்பட்டது.இவர்கள் மட்டுமின்றி திருமால், பிரமன் போன்றவரும் யாகத்தில்
கலந்து கொண்டதால் தண்டிக்கப்பட்டனர்.
சிவனை மதியாத
யாகத்தில் கலந்து கொண்டதற்காகத் திருமால் உயிர் மட்டும் உடையவராய் தண்டிக்கப்பட்டார்.
யாகத்தில்
கலந்து கொண்டதற்குத் தண்டனையாகப் பிரம்மன் தலையும், கலைமகளின் மூக்கும் அறுபட்டது.
தக்கன்
யாகத்தில் இந்திரன் முதலான தேவர்களும் கலந்து கொண்டனர். அதற்கேற்ற தண்டனையும்
பெற்றனர். சந்திரனின் அழகியமுகம் தேய்ந்து
அழியும்படி தண்டணயும்,வீரபத்திரன் சந்திரனை அவ்வளவில் விட்டு, கதிரவன் பயந்து ஓடவும் அவனது பற்கள் உதிருமாறு கன்னத்தில் அடித்தார்
என்ற செய்தியை,
"சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற"
என்று சூரியன் பற்கள் நெரிந்தமையால் வேள்வி மயங்கிற்றென மணிக்கவாசகர் பாடியுள்ளார். பகன் என்பவன் பன்னிரு சூரியர்களுள் ஒருவன். அவன்
தக்கன் யாகத்தில் வந்த தீமைக்காகக் கண் பிடுங்கப்பட்டது.
தக்கன்
அக்கினிக்கு அவியினை அளித்தான். அக்கினி கைகள் அவியை ஏற்று உண்ணத் திரட்டியதால்
அவற்றின் கைகள் வெட்டப்பட்டது. என்று அக்கினி கைகள் வெட்டப்பட்டதால் யாகம்
நிலைகுலைந்து. இங்ஙனம் தேவர்களுக்குத் தண்டணை அளிக்கப்படுவதைக் கண்டான் இந்திரன்.
தப்புவதற்காகக் குயில் உருவங்கொண்டு இந்திரன் மரத்தினில் ஏறி ஒளிந்து கொண்டான் , அவனது தோளை வீரபத்திரனால்
நெரிக்கப்பட்டது. இத்தண்டணை
வழங்கப்படுவதைக் கண்ட மற்றைய தேவர்கள் அஞ்சி ஓடினர். மரணம் வந்தால் அஞ்சுவர் எமனுக்கு. இங்கு எமனே வீரபத்திரனைக் கண்டு
அஞ்சினான்.எமனின் உயிரையும், காமன் உடலையும் பறித்தார். இங்ஙனம் வீரபத்திரன் தண்டணையைக் கண்டு திருமாலும் தேவர்களும்
மற்றுவரும் சிவனை வழிபட்டு வணங்கினர். சிவன் வீரபத்திரனைத் தடுத்தார். உயிர் இழந்த
அனைவரையும் உயிர்ப்பித்தார்.
தக்கன் தலை தீக்கிரையாகி விட்டதால் ஆட்டுத்தலை
பொருந்தி உயிர் பெற்றெழச் செய்தார்.
தக்கன் தனது
தவறுக்கு வருந்தி சிவனை வணங்கினான். சிவபெருமான் அருளோடு யாகத்தையும் நடத்தி
முடித்தான்.
இப்புராணத்தின்
வழி எக்காலத்திலும், எத்தன்மையரும் பழித்தல் கூடாதென்ற
செய்தியினை அறியமுடிகிறது.
காமனை எரித்த புராணம்
காமக்கடவுள்
காமன். சிவனால் எரிக்கப்பட்டு பின் அருள் பெற்றான்.
தாராகாசுரன்
என்பவன் சிவனின் புதல்வனால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டுமென வரம் பெற்றான்.
அவன் தேவர்களைத் துன்புறுத்தினான். அதனால், முருகன் பிறப்பதற்குச் சிவன் பார்வதியின் திருமணம் நடக்க வேண்டுமென
எண்ணினர்.
இதன்பொருட்டு
சிவன் மோன நிலையிலிருந்து விடுபட இரதியும் காமனையும் வரவழைத்தனர். மன்மதன்
இறைவன்மேல் மலர்க்கணையை விடுத்தான். இறைவன் சினங்கொண்டு நெற்றிக்கண்ணை விழித்தார்.
அதனின்றும் வந்த தீயால் மன்மதன் சாம்பலாயினான்.
மன்மதனின் மனைவி
இரதியின் வேண்டுகோளுக்கு இரங்கி இறைவன் மீண்டும் அவனை எழுப்பினார். ஆனால், அவனது உடல் அவளுக்கு மட்டும் புலனாகும்படி அருளினார். அதனால்
மன்மதனுக்கு அனங்கனென்ற பெயர் உண்டாயிற்று.
இப்புராணம் இல்வாழ்க்கையில்
ஈடுபட்டாலும் புலன்களின் இன்பத்துக்கு அடிமையாதல் கூடாதென்று வலியுறுத்துகிறது.