Skip to main content

கட்டுரைகள்




    நாம் படிக்க வேண்டிய நாவல்களில்  ஒன்று       பத்மாவதி             சரித்திரம்.   இந்நூல்     குறிப்பிட்ட கால   தமிழ்     மக்களின்  வாழ்வியலும்,  இல்லற நெறியும் காட்டுவது. இருப்பினும், கல்விக்கு முதன்மையான பங்கு அளிப்பவை.

.




            தமிழ் இலக்கிய உலகில் நாவல்களின் பங்கு அளப்பெரிது . ஒரு சில நாவல்கள் சமுதாயத்திற்கு ஏற்றம் தரும் வகையில் அமைந்துள்ளன.அதில் ஒன்று தான் அ.மாதவையா இயற்றிய பத்மாவதி   சரித்திரம்.

                   இந்நூல் தமிழ் மொழியில் நாவல்கள் பெருகி வளருவதற்குக் காரணமான நூல் ஆகும் . மேலும், மற்ற நாவல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் திகழ்ந்து வந்தது.


     இந்நாவலின் ஆசிரியர் இந்நூலின்  கதையை விடவும் கல்விச்சிந்தனைக்கே  முதன்மையளித்து எழுதியுள்ளார். கதையூனூடே கல்வியைக் குறித்தலான இவரின் சிந்தனைகள் பரவி காணப்படுகின்றன. 

   “தீயானது மனிதனுடைய சரீர சௌக்கியத்துக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு கல்வியானது நம்முடைய நல்லொழுக்கத்துக்கும், சுகத்துக்கும் உயர் பதவிக்கும் அவசியமானது” 

என்று கல்வி பற்றிய இவரது ஆழ்ந்த கருத்தினை நம்மால் உணர முடிகிறது.

கற்பிக்கும் ஆசிரியர்

       கல்வி மீது பற்று கொண்ட இந்நாவலாசிரியர், கற்பிக்கும் தொழிலை பெருமிதமாக கூறியுள்ளார். 

            “வாலிபரைத் தாயினும் அருமையாய் ஆதரித்து, அவர்களுக்கு அற்புதமான அறிவைப் புகட்டி அவர்கள் யுக்தி புத்திகளைச் சன்மார்க்கத்தில் செலுத்துவதிலும் மேன்மையான தொழில், மனிதனுக்குக் கிடைத்தலரிது. ஏனைய உத்தியோகங்கள் யாவற்றினும், எவ்வழியாவது, சிறிது பொய், புரட்டு, களவு, அநியாயம், ஏழைகளைத் துன்புறுத்துதல், கொடுமைகளைச் செய்யா வண்ணமாகச் செய்வித்தல் முதலிய பலவிதத் தீச்செயல்கள் நேரிடக்கூடும். இதிலோ அப்படியன்று; இது, தருமத்தைப்போல், ஈவோனுக்கும், ஏற்போனுக்கும் நன்மையையே பயக்கும் பண்புடைத்தாயிருக்கின்றது”

என்று ஆசிரியர் தொழிலே சிறந்த தொழிலெனக் கூறும் இவர், அரசர், மந்திரி, தாயைக் காட்டிலும், இராச்சியங்களை ஆளுவது உண்மையிலே குழந்தைகளை ஆளும் பள்ளியாசிரியரே என்ற கருத்தினைப் பதிவு செய்கிறார். 

       ஆசிரியர் இலக்கணம் கூறும் நன்னூல், ஆசிரியர் ஒழுக்கம் கூறும் அற இலக்கியங்கள் தவிர, பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களிலும் இக்கருத்தினைக் காணலாகிறது. 

   “பள்ளியாசிரிய வேலையை வகிப்பவர்கள், எவ்வளவு புத்திமான்களாயும், பொறுமையுடையவர்களாயும், இயற்கையாக அன்புப் பெருக்குடையவர்களாயும் மாசு மறுவற்ற மனமுடையோராயும் இருத்தல் வேண்டும்.......... சிலர், மூடர் ஆடு மாடுகளை அடிப்பதுபோல் குழந்தைகளை அடிக்கிறார்கள்; சிலர், எப்பொழுதும் கோபாவேசமாகவே இருக்கிறார்கள்; பெரும்பான்மையோர், தாங்கள் கற்பிக்கப் புகும் கல்வி விஷயத்தில் சர்வ மூடர்களாயிருக்கிறார்கள்”

     என்று ஆசிரியர் இராஜகோபாலையர் என்ற கதாபாத்திரத்தின் வழியாக தமது சிந்தனையைச் சமுதாயத்தில் ஊடுருவ முயல்கிறார். 

கற்கும் முறை

“பத்மாவதி சரித்திரம்” ஒரு நாவல் என்பதைவிட, அ.மாதைய்யாவின் சிந்தனைக் களஞ்சியம் என்றே கூறலாம். ஓவியத்தில் இடம் பெற்றிருக்கும் வர்ணங்கள் போல் தம் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அதிக பங்கு வகிப்பது படிப்பறிவு பற்றியே. பாரதியார்,  

“காலை எழுந்தவுடன் படிப்பு . . .”

  என்று கூறுவதுபோல், இந்நாவலில் வரும் நாராயணன் என்ற கதாப்பாத்திரத்தைப் படிப்பில் மீது கவனம் செலுத்துபவனாகக் காட்டுவதற்கு, 

“வைகறையில் நாலு மணிக்கு முன்னதாகவே எழுந்து படிக்கத் தொடங்கிவிடுவான்”

          என்று காட்டுவது மட்டுமில்லாமல் தான் படிக்கும் கம்பராமாணயம் போன்ற புத்தகங்களை நேசிப்பவனாகக் காட்டியுள்ளார். மேலும்,

          “ஒருவன், ஒரே காலத்தில் புத்தகமும் படித்துக் கொண்டு பாட்டும் பாடிக்கொள்ள முயல்வானாயின், படிப்பும் பயன்படாது. பாட்டும் அகப்படாது, இவ்வுண்மை அறியாது, அநேகர், தாங்கள் கால துரிதஞ் செய்வதாக வீணில் கருதி, இரண்டு மூன்று வேலைகளை ஏககாலத்திற் கைக்கொண்டு, அதனாலுண்டாகுந் தவறுகளால், இயல்பாகச் செல்லக்கூடும் பொழுதிலும் அதிக நேரத்தைப் பாழாக்குகிறார்கள். ஒரே காலத்தில் ஒரே வேலை, அதை நன்றாய் செய்ய வேண்டும்”

என்றுரைப்பது மாணவர்களிடம் கொண்ட நல்லெண்ணம் புலனாகிறது. 

பெண்கல்வி
பெண்கல்வி முக்கியத்துவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் நாவல் வரலாற்றைப் பொறுத்தவரையில் இவரது பங்கும் அளப்பரியது எனலாம். 


            “புருஷனிடத்தில் பணமிருந்தால் பெண் சாதிக்கு நகைகள் செய்யலாம்; ஆனால், புருஷன் மட்டும் சாப்பிட்டால் பெண்சாதி வயிறு நிறையுமா? அதுபோலதான் கல்வியும் அறிவும். ஆதலால், அறிவையடையும் பொருட்டு, மானிப் பிறப்பு எடுத்தவர்கள் யாவரும் கல்வி கற்க வேண்டும்; ஒருவருக்காக ஒருவர் படித்தால் பயன்படாது”

என்று பெண்கல்வியை ஆதரிப்பதுடன், பெண்கள் படிக்காமல்மூடத்தனமாயிருப்பதையும் சாடுகிறார்.

கல்லாமை
கல்வி கற்பிக்கப்பட்டவர்கள் நல்ல குடிமக்களாக பாராட்டப்படுவதும், கல்லாதவர்கள் நரகிற்குச் செல்வர் என்பதும் நமது ஆன்றோரின் கூற்று. பத்மாவதி சரித்திரத்திலும்,

 “கல்யாணத்தின் சந்தோஷத்துக்கு இடையூறாகவிருக்கும் படிப்பை முற்றிலுமே விட்டுவிட்டு, ஊரிலாவது, வேற இஷ்டமான இடத்திலாவது போயிருந்து கொண்டு, தொன்றுதொட்டு யாவராலும் புகழப்பட்டதாயும், உலகத்தில் முயற் கொம்புபோல அரிதாகவுமிருக்கிற இந்த மெய்யன்பு வெள்ளத்தில் மூழ்கித் தேக பரவசமான ஆனந்தத்தையடைந்து, அவள் மனம் போனபடியெல்லாம் நடந்து, ஏன் சுகமாகக் காலத்தைக் கழிக்கக் கூடாதென்று எண்ணுகிறேன். ஆனால், மேலான புத்திக்கு அது மிருகங்களின் வாழ்க்கைக்குச் சமமாகத் தோன்றுகிறது”

என்று எடுத்துரைக்கிறார். ஆசிரியர் இங்ஙனம் தனது கல்விக் குறித்த சிந்தனைகளைக் கூறுவதோடு அல்லாமல், எதிர்பார்ப்பின்றி ஏழை மாணவர்க்குப் பாடம் புகட்டிய கிறித்துவர்களையும் புகழ்ந்துள்ளார். மற்ற நாவல்கள் போல் கதாபாத்திரங்கள் சிக்கலில் மீள்வது, செல்வத்தில் முன்னேறுவது, குடும்ப விருத்தியாவது என்று கூறாமல், கல்வியில் முன்னேறிய மேதைகளாகக் காட்டுவது சிறப்புக்குரியது.

நாவல் நடுவில் திருக்குறள், கம்பராமாயணம், தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றை மேற்கோளாகப் பயன்படுத்திருப்பது இவரது கல்வித்திறனைக் காட்டுவதாய் உள்ளது. மேலும் தனது சிந்தனையைக் கல்வியில் மட்டும் திணிக்காமல், மகளிர் நிலை, பொருளாதாரம், குடும்பத்தின் உறவு நிலை போன்றவற்றையும் காட்டியுள்ளார். கதையோட்டத்துடன் தனது சிந்தனையைப் புகட்டியிருப்பது இவ்வாசிரியரின் சிறப்பம்சமாகும். 

                                            ________________

                                            ஆசாரக்கோவை கூறும் சுகாதாரம் 


                 அறநூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை . இந்நூல் சுகாதாரம் சார்ந்த நூல் ஆகும். வீட்டிலும் ,பொது இடங்களிலும் மக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல் எனலாம்.அகத்தில் அழுக்கின்றி வாழ வழிகாட்டும் திருக்குறள், நாலடியார் போன்று புறத்தில் அழுக்கின்றி வாழ இந்நூல் வழிகாட்டுகிறது..இதனைப் பின்வருமாறு காணலாம்.

                                  " காட்டுக்  களைந்து  கலங்கழீஇ  யில்லத்தை"....

எனத் தொடங்கும் பாடலில் எங்ஙனம் சுத்ததோடு இருக்க வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறப்பட்டுள்ளன.


                                     
                                              காலையில் துயில் எழ வேண்டும்.
                                 

                 காலையில்  துயில்  எழுவதன் வழி,  ஆரோக்கியமும், அன்றைய  நாள்  சுறுசுறுப்புடனும்  செல்லும்.

                                             
         வீட்டையும்,அதன் சுற்றிய பகுதியும் சுத்தம் செய்தல் 

        வீட்டைச் சுத்தம் செய்த பின்பே மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி வெளிப்பகுதியும் கூட்டிச் சுத்தம் செய்து .  தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போதுதான் சிறு தூசுகள் கூட வீட்டுக்குள் நெருங்காமல் இருக்கும்.
                                         
                                                 பாத்திரங்களைத் துலக்கல் 
                                           


.       சமையல் செய்வதற்க்கு முன் எச்சில் பாத்திரங்களைச் சுத்தம் படுத்த வேண்டும் .அதுமட்டுமின்றி சமையல் செய்யும் இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.


                                                பசுவின் சிறுநீரைத் தெளித்தல் 
                                                      

வீட்டைச் சுத்தம் செய்து பின்னும் வீட்டினுள் இருக்கும் கிருமிகளை அகற்ற முடியாது.அதனால்,சமையல் செய்வதற்க்கு முன் குளித்து விட்டுப் பசுவின் சிறுநீரை ஆங்காங்கே தெளித்தல் வேண்டும் 

                                               நீர்ச்சால் மற்றும் குடத்திற்குப் பூச்சூட்டல் 


சமையல் செய்வதற்க்கு தண்ணீர் அவசியம் . அத்தண்ணீரும் சுத்தமானதாக இருக்க வேண்டும் .அக்காலத்தில் நீர் தரக்கூடிய நீர்ச்சால் மற்றும் குடத்திற்குப் பூச்சூட்டி  அவ்வப்போது கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொள்ளுவர்.இக்காலத்தில் அது இயலாது எனினும் பிடித்து  வைத்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தலாம்.

                                                          சமையல் செய்தல் 


மேற்கூறியவற்றை முடித்த பின்னரே சமையல் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் உண்ணும் உணவு  ஆரோக்கியமானதாக அமையும். 



                   சமையல் ஒழுக்கங்கள் மட்டுமின்றி செய்ய கூடாதவற்றையும் இந்நூல் ,
                    "தலையுரைத்த  எண்ணெயா லெவ்வுறுப்புந் தீண்டார்"....    

என்று தொடங்கும் வரிகளில் காணலாம்.


தலையில்  தடவிய     எண்ணெயைக் கொண்டு வேறு இடங்களில் தடவல் கூடாது. 


 தலையில் எண்ணெய் தேய்த்துப் பின் வேறு இடங்களில் தேய்த்தல் கூடாது.அவ்வாறு தேய்த்தால் தலையில் இருக்கும் அழுக்குகள் மற்ற இடங்களிலும்  படிந்து நோய் வரும்.
                    

          பிறர் அணிந்த அழுக்குத்  துணிகளைத் தொடக்கூடாது 

பிறரின் அழுக்குதுணிகள் நாம் தொடும் போது அன்னவரின் உடம்பில் உள்ள நோய்கள் நம்மை தாக்கல் கூடும்.

                       பிறர் பயன்படுத்திய செருப்புகளை அணிதல் கூடாது 

                   

 மற்றவரின் காலில் உள்ள அழுக்கு செருப்பில் படிந்து நமக்கு நோய் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதிகம் தோல் நோய்களே  ஏற்படுத்தும் .
      
                                  இங்ஙனம் சிறிய விசயங்களில் கூட பெரிய ஆபத்துகள் அடங்கிருப்பதனைக் இந்நூல் குறிப்பிடுக்கிறது.மேலும்,நீர் மாசுப்படுவதற்க்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது.
    
                     "நீராடும் போழ்தில் நெறிபட்டார்   எஞ்ஞான்றும்"..

   எனத் தொடங்கும் பாடலில் நீராடும் ஒழுக்களைக் குறிப்பிடுகிறது 

                                                               நீர்மாசுபாடு                
.


ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் ஏற்படுவதே இயல்பான விசயமாக இன்றையக் காலங்களில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்நூல் ஆற்று நீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள   நீந்தல் ,நீரில் கொப்பளித்தல் ,நீரைக் கலக்கல்,நீரில் விளையாடல் போன்றவற்றை செய்ய வேண்டாமெனச்  சாடுகிறது. 



                             இங்ஙனம் ஆசாரக்கோவை கூறும் வகையில் மனிதன் பின்பற்றினால் சமுதாயங்கள் தூய்மையாக இருக்கும்

                                 





Popular posts from this blog

சிவபெருமானின் தோற்றப் புராணம்

     

சிலப்பதிகாரக் கிளைக் கதைகள்

                                    

சிவனின் அழித்தல் புராணம்