Skip to main content

அருள் புராணம்



















             இறைவன் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தலென முத்தொழில் ஆகும்.அவையன்றி மறைத்தல், அருளல் தொழிலும் அடங்கும். அருளல்என்பது ஆன்மாக்களின் பாசத்தை நீக்கி வீடுபேறு அளித்தலாகும். இறைவன் அருள் புரிவது உயிர்களுக்குப்  பேரின்பத்தைத் தருவதற்காகவும் கொள்ளலாம். 

    ஆடல் வல்லானின் திருநடனம் இறைவன் உயிர்கள் பொருட்டுச் செய்யும் ஐந்தொழில்களைக் குறிக்கிறது. அதில் அருளல்என்பது தூக்கிய திருவடி ஆகும். உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் தூக்கிக்கரை சேர்த்து அருளுவதைக் குறிக்கிறது.

             புராணங்களில் இறைவனது அருளும் கருணையும் கூறப்பட்டுள்ளது. அடியவர்கட்கும்,     பறவை விலங்குகள் போன்ற உயிர்கட்கும், மற்றைய கடவுளர்க்கும்இரங்கி அருள்புரியும் சிவன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வேடங்கள் பூண்டும் உயிர்களுக்கு அருள்புரிகிறார்.

வெள்ளை யானைச் சாபம் தீர்த்த புராணம்

                          


            சாபம் ஏற்ற வெள்ளை யானையின் துன்பத்தை நீங்கி அருள்புரிந்தார் சிவபெருமான்.       முன்பு தேவேந்திரன் வெற்றி வீரனாயப் பூவுலகிலிருந்து தேவலோகம் சென்றான்.அவன் வெற்றியைப் பாராட்டிப் பலரும் கையுறை நல்கினர். துருவாச முனிவர் சிவலிங்கத்தினிடத்துக்    கிடைத்த மலரைக் கொடுத்தார். இந்திரன்  செருக்குற்று அதனை வாங்கித்  தன்   பட்டத்து   யானையாகிய அயிராவதத்தின் மத்தகத்து மேல் வைத்தான். அது அந்த மலரின் அருமையறியாது கீழே தள்ளிக்    காலால் சிதைத்தது. முனிவர் கோபங்கொண்டார். அயிராவதத்தைக் காட்டு யானையாகக் கடவதெனச்   சாபமிட்டார். அவ்வாறே யானை கடம்பவனத்தில் காட்டானையாகப் பிறந்தது. சிவனை நாளும் வழிபட்டது. இறைவனருளால் சாபம் நீங்கி பழைய உருவம் பெற்று தேவலோகத்தை அடைந்தது. இப்புராணத்தை,

                 "விடையவன் வரங்க ணல்கி விடைகொடுத் தருளினானே"

      என்று சிவன் அயிராவதத்திற்குப் பல வரங்களைக் கொடுத்து அருள் புரிந்தாரெனத்   "திருவிளையாடற் புராணம்" எடுத்துரைக்கிறது. இதன் வழி பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள்     தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய முடிகிறது.

பன்றிக் குட்டிக்கு முலை பால் கொடுத்த புராணம்



                     சிவபெருமான் பசியால் துடித்த பன்றிக்குட்டியின் துன்பம் தீர்த்து அருள்புரிந்தார்.
           
   தவஞ்செய்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் பன்னிரண்டு இளைஞர்கள் குறும்பு செய்தனர். அம்முனிவர் கோபங்கொண்டு சாபமிட்டார். அதன்படி பன்னிருவரும் காட்டில் பன்றிக் குட்டிகளாய்ப் பிறந்தார்கள்.அக்குட்டிகளின் தாய் இறந்தது. பசியால் குட்டிகள் தவித்தன. தாய்ப் பன்றியாக  இறைவர் வந்தார். அக்குட்டிகளுக்குப் பால் கொடுத்து துன்பம் போக்கினார். அவை பின்னர்  பண்டையறிவு வரப்பெற்றுப் பாண்டியனுக்கு அமைச்சராய்த் திகழ்ந்தன.

                          "ஆன வன்புடைப் பேடையின் வடிவெடுத் தயருங்
            கான வன்பறழ் கலங்கஞர் கலங்கநேர் வந்தார்"

என்று பன்றிகளின் துன்பம் நீங்கும் பொருட்டு இறைவன் தாய்ப்பன்றி வடிவில் வந்தாரெனத்    "திருவிளையாடற் புராணம்" கூறுகிறது. இப்புராணம் மூலம் துன்பம் நேரும் பொழுது பிறர் உதவி         புரிதல் வேண்டுமென்று உணரப்படுகிறது.


கருங்குருவிக்கு உபதேசித்த புராணம்
                              
                     


            துன்பத்தில் இருந்த குருவியின் துயரம் நீங்கி இன்பம் அளித்தார் சிவபெருமான்.
            
 முன்னொரு காலத்தில் கருங்குருவி ஒன்று காக்கைகளால் துன்புறுத்தப்பட்டு வந்தது. அக்குருவி தினந்தோறும் சிவனை வணங்கித் துன்பம் போக்குமாறு வழிபட்டது. இறைவன் அக்குருவிக்கு இரங்கி மந்திரோபதேசம் செய்தார். அதனால் தானும் தன் கிளையும் துன்பம் நீங்கி இன்பம் பெற்றது.

             இச்செய்தியினைத் திருவிளையாடற் புராணம்,
                  
                          "சத்திய ஞான மிர்த்திஞ் சயத்தினை யுபதே சித்தான்"

என்று குறிப்பிடுகிறது.
        
    இங்குக் கருங்குருவி தன் சுற்றத்தினரோடு இருத்தலென்பது மனிதனும் தன் சுற்றத்தினரின்   துன்பத்தை நீக்கி வாழ வேண்டுமென்ற கருத்து புலப்படுகிறது.

புலியானது மான் குட்டிக்குப் பால் கொடுத்த புராணம்

            தாய் இழந்த மான்குட்டியின் துன்பம் தீர்ந்து அருள்புரிந்தார் இறைவன்.

            பண்டொருகாற் பாண்டிய நாட்டில் ஒரு கடப்பங்காட்டில் தனித்து வாழ்ந்தது ஒரு பெண்மான்.     அது தன் குட்டியை ஒரு புதரில் மறைத்து வைத்து நீர் பருகச்சென்றது. அப்பொழுது ஒரு வேடன் அதை   ஓர் அம்பால் எய்து வீழ்த்தினான். அது தன் குட்டியை நினைத்து உயிர் விட்டது. தாயை இழந்த குட்டிக்கு இறைவனருளால் அக்காட்டிலிருந்த ஒரு பெண்புலி பால் கொடுத்து வளர்த்தது. 

ஆகமம் அருளிய புராணம்


            ‘ஆகமம்என்பது பதி, பசு, பாசும்என்ற மூன்றையும் கூறுவது ஆகும். இதனைச் சிவனே          படைத்தார். அதனைத் தக்கோர்க்கு அருளவும் செய்தார். ஒரு காலத்தில் உலகம் யாவும் அடங்கின.      ஊழிக்காலம் வர மறைகளும் ஒடுங்கின. பின்னர் சிவன் திருமுன்னர் யாவும் தோன்றின. அப்போது    இறைவன் திருவாக்கிலிருந்து ஆகமங்கள் தோன்றின. 

       ஒரு முறை  இறைவன் அம்பிகைக்கு ஆகம நூற்பொருளை உபதேசித்தார். ஆனால், இறைவி அதிற்    போதிய நாட்டம் செலுத்தவில்லை. அதனால், உமை இறைவனது சாபமேற்று வலைஞனுக்கு மகளாய்    பிறந்தாள். இதைக் கேள்வியுற்ற     மூத்த பிள்ளையாரும்,       இளைய பிள்ளையாரும் இறைவனது        திருமுன்பு வந்தனர். அவர் கையிலிருந்த ஆகம நூல்களை வாங்கிக் கடலிலே வீசி எறிந்தனர். சமயம் தெரியாது     இவர்களை உள்ளே அனுமதித்த நந்தி தேவரும் கடலிலே சுறாமீனாகும்படி சபிக்கப்பட்டார். பின்பு இறைவனே   சாபம் தீர்க்க வேண்டி வலைஞனராய் வந்தார். நந்திதேவர் ஆகமத்தைத் தாங்கிய வண்ணம் கடலில்          சுறாவாக மீனவர் வலைக்குத் தப்பித் திரிந்தது. வலைஞரான சிவன் சுறாவினைப் பிடித்தார்.     பின் சாபத்தையும் நீக்கினார். இறைவியாகிய வலைஞமாதை மணந்து விமோசனமும் அளித்தார்.

            இறைவர் மீட்டிய ஆகமத்தைக் கொண்டுத் திருவுத்தரகோச மங்கைஎன்னும் தலத்தில்   அம்மையாருக்கும், அறுபதினாயிரம் சிவனடியார்க்கும் சிவயோகிகளுக்கும் நூற்பொருளை உபதேசித்தார்.  இதனை,


             "பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப்
      பொங்கிருஞ் சதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார"

என்று இப்புராணத்தைத் "திருவிளையாடற் புராணம்" விரித்துக் கூறுகிறது. இப்புராணத்தில் சிவன்     தண்டனை அளித்தாலும் இறுதியில் அருள்புரிகிறார். மேலும், நன்மை பொருட்டு ஒருவர் அளிக்கும்       தண்டனை ஏற்பது பயன்தரும் என்பது அறியமுடிகிறது.

தாருகாவன மகளிருக்கு அருளிய புராணம்

            சாபமேற்ற பெண்களின் துன்பம் நீங்க இறைவன் அருள்புரிந்து அருளினார்.

            தாருகாவன முனிவர்கள் இறைவன் மீது பற்று அற்றவர்கள். அவர்கள் போக்கை மாற்றுவதற்குச்    சிவன் பரதேசி கோலத்திலும், திருமால்  மோகினி உருவங்கொண்டும் சென்றனர். சிவன் தாருகாவன பெண்களிடம் பிச்சைக் கேட்டார். அப்பெண்கள் அவரின் அழகில் மயங்கினர். இதனால் முனிவர்கள்    கோபங்கொண்டு சபித்தனர். அதன்படி மதுரையில் வணிக மகளிராய்ப் பிறந்தனர். சிவன் அவர்களுக்கு அருளும் பொருட்டு வளையல் வியாபாரியாக வந்தார். சாபமேற்ற ஒவ்வொரு பெண்ணுடைய கரங்களிற் வளையல்களைப் பூண்டினார். அவ்வளவில் அப்பெண்களின் சாபம் நீங்கப் பெற்றது. இதனை,

                      "மறந்துதும்பு வேனெடுங்கண் வணிகமாதர் சிறிதுநாள்
          துறந்தரன்ற னருளடைந்து துணையடிக்கண் வைகினார்"

என்று இறைவன் வளையல் வியாபாரியாய் வந்ததைத்"திருவிளையாடற் புராணம்" எடுத்துரைக்கிறது.      பெண்கள் தங்கள் மனதை அலைபாய்தல் இல்லாமல் வைத்தல் வேண்டுமென இப்புராணம் உணர்த்துகிறது.

             

Popular posts from this blog

சிவபெருமானின் தோற்றப் புராணம்

     

சிலப்பதிகாரக் கிளைக் கதைகள்

                                    

சிவனின் அழித்தல் புராணம்